12th இயல் 1 – Book Back Answers
இலக்கணத் தேர்ச்சிகொள்
1. பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
3. முடிந்தால் தரலாம், முடித்தால் தரலாம் - இவ்விரு சொற்றொடர்கள் உணர்த்தும் பொருளை அறிந்து தொடர் அமைக்க.
4. தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
நம்மை அளப்போம்
பலவுள் தெரிக.
1. ச.த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்
அ) பௌத்தமும் தமிழும் இ) சமணமும் தமிழும்
ஆ) இசுலாமும் தமிழும் ஈ) கிறித்துவமும் தமிழும்
2. "மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு" கவிஞர் குறிப்பிடும் பழமைநலம் என்பது
1) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது
2) பொதிகையில் தோன்றியது
3) வள்ளல்களைத் தந்தது
அ) 1 மட்டும் சரி ஆ) 1, 2 இரண்டும் சரி
இ) 3 மட்டும் சரி ஈ) 1, 3 இரண்டும் சரி
3. "மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்!" - இவ்வடிகளில் பயின்று வந்துள்ள தொடைநயங்களைத் தேர்க.
அ) அடிமோனை, அடிஎதுகை ஆ) சீர்மோனை, சீர்எதுகை
இ) அடிஎதுகை, சீர்மோனை ஈ) சீர்எதுகை, அடிமோனை
4. "செம்பரிதி..." எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு
அ) அற்புதக் கவிதை ஆ) நிலவுப்பூ
இ) சர்ப்பயாகம் ஈ) சூரியநிழல்
5. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
அ) மத்த விலாசம் ஆ) தமிழ்நாட்டு வரலாறு
இ) அஞ்சிறைத் தும்பி ஈ ) திசை எட்டும்
குறுவினா
1. 'தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்' நூல் பற்றிக் குறிப்பு வரைக.
- அழகுக் கலைகள் பற்றி தமிழில் வெளிவந்த முழுமையான நூல்.
- தமிழ்ச்சமுதாயம் தனது பழைய அழகுக் கலைச் செல்வங்களை மறந்து, தன் பெருமை அறியாச் சமூகமாக இருந்த நிலைகண்டு, மயிலை சீனி. வேங்கடசாமி இந்நூலை எழுதினார்.
2. "விரிபெரு தமிழர் மேன்மை
ஓங்கிடச் செய்வ தொன்றே
உயிர்ப்பணியாக் கொண்டோன்" – யார், யாரைப் பற்றி எதற்காகக் கூறுகிறார்?
- இவ்வடிகள், மயிலை சீனி. வேங்கடசாமி பற்றிப் பாவேந்தர் பாரதிதாசன் கூறியது.
- தமிழ்ப் பண்பாட்டிலும், தமிழர் வரலாற்றிலும் தனித்தன்மைகளை ஆய்வு செய்து ஆவணங்களை தொகுத்தளிக்கும் பணியை மேற்கொண்டதால் சீனி. வேங்கடசாமியை இவ்வாறு பாரதிதாசன் பாராட்டுகிறார்.
3. கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?
- உழைப்பில் சிவந்த கைகளை உடைய தொழிலாளர், அவர்தம் தோள்மீதில் முத்துமுத்தாக வீற்றிருக்கும் வியர்வைத்
- துளிகள் ஆகியவற்றைப்பற்றி வியந்துபாடத் தமிழின் துணைவேண்டும் எனக் கவிஞர் சிற்பி கூறுகிறார்
4. விடியல், வனப்பு - இரு சொற்களையும் ஒருங்கே அமைத்து ஒரு தொடர் எழுதுக.
- காலை விடியலின் வனப்பு கண்களைக் கவரும்.
சிறுவினா
1. மயிலை சீனி. வேங்கடசாமியின் வரலாற்று ஆய்வுகள் பற்றி விளக்குக.
- கி. பி-. 3முதல் 9வரை ஆட்சிபுரிந்த மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், மூன்றாம் நந்திவர்மன் ஆகியோர் வரலாறுகளை எழுதினார்.
- மூவேந்தர்கள், கொங்கு நாட்டு மன்னர்கள், துளுநாட்டு மன்னர்கள், களப்பிரர் மற்றும் இலங்கை குறித்த வரலாறு ஆகியவற்றை மட்டும் எழுதாது,
- அக்கால அரசியல், பண்பாடு மற்றும் கலை வரலாறுகளையும் பதிவு செய்து, ஆய்வு நூல்களை எழுதினார்.
2. "செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்" - தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
- செங்கதிர்களைப் பரப்பும் மாலை நேரத்துச் சூரியன், மேற்கில் மலைமேட்டின்மேல் தலையைச் சாய்ப்பான். அவ்வேளையில், அந்தி நேரத்தில் வானம் முழுவதும் செந்நிறம் பரவும்.
- அதே வேளையில், விண்ணில் மீன்கள் கண் சிமிட்டும். இக்காட்சி, நாளும் நடைபெறும்.
- இதனைக் கண்டு சுவைத்த கவிஞர், நயமான சொற்களைக் கொண்டு, கவிதை பாடியுள்ளார்.
- இந்த வரிகளைப் படிக்கின்றபோதே, மனக் கண்ணால் இக்காட்சியைக் கண்டு படித்து மகிழ முடிகிறது.
3. "ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
இடம் :
தண்டி அலங்காரம் உரைமேற்கோள் பாடலில் இடம்பெற்றுள்ளது.
பொருள் :
“ஒலிக்கும் அலைகளையுடைய கடலால் சூழப்பட்ட உலகத்தில் இருள் போக்கும்” என்பது பொருள்.
விளக்கம் :
சூரியன், தன் கதிர்களால் உலகில் பரவியுள்ள புற இருளைப் போக்கும்;
தமிழோ, மக்களின் அக இருளைப்போக்கி, அறியாமையை அகற்றும் சிறப்புடையது என்பதாம்.
4. பின்வரும் இரு பாக்களின் கருத்துகளிலுள்ள வேற்றுமையை எடுத்துக்காட்டுக.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே.
-நன்னூல்.
மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு
மெய்சிலிர்க்கத் தமிழ்க்குயிலே! கூவி வா, வா!
-சிற்பி பாலசுப்பிரமணியம்
- “பழையனவாகிவிட்ட சில நடைமுறைகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதும், புதியன வாகிய சில நடைமுறைகள் பயன்பாட்டில் சேர்க்கப் படுவதும் குற்றம் ஆகாது; காலத்திற்கு ஏற்ப மாறுதல்களை ஏற்றுக்கொள்வது கட்டாய மாகும்” என்பது, நன்னூல் பாடலால் பெறப்படும் செய்தி.
- “அந்தப் பழமை நலத்தை மீண்டும் புதுக்குதற்கு, உடல் சிலிர்த்து எழுமாறு தமிழ்க்குயில் கூவி வரவேண்டும்” என்பது, இளந்தமிழே பாடலின் இலக்கியச் சாரம்.
- பழமை எல்லாம் தேவையற்றவை என்று ஒதுக்கி விடவும் கூடாது. பழமையானவற்றுள்ளும் நலம் பயக்கும் பல செய்திகள் இருக்கலாம். பழமையைப் புதுக்குவதன்மூலம், சமுதாயம் மறுமலர்ச்சி பெறத் தமிழ் உதவ வேண்டும் என்பது கருத்து
நெடுவினா
1. மயிலை சீனி. வேங்கடசாமி ஓர் 'ஆராய்ச்சிப் பேரறிஞர்' என்பதனைச் சான்றுகளுடன் நிறுவுக.
மயிலை சீனி. வேங்கடசாமி தொடக்ககால ஆய்வுகள் :
‘கிறித்தவமும் தமிழும்’ என்னும் நூல், மயிலை சீனி. வேங்கடசாமியின் முதல் ஆய்வு நூலாகும்.
சமயக் காழ்ப்புணர்வு இன்றிப் ‘பௌத்தமும் தமிழும்’, ‘சமணமும் தமிழும்’ ஆகிய நூல்களையும் இயற்றினார். வட்டெழுத்து, கோலெழுத்து, பிராமி ஆகியவற்றில் புலமை பெற்றிருந்தார். அதனால் கல்வெட்டுச் சாசனங்களை எளிதாக வாசித்து, 19ஆம் நூற்றாண்டு மன்னர்கள் குறித்துத் தொடர்ந்து எழுதினார். களப்பிரர் குறித்த புதிய கண்ணோட்டத்துடன், ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்னும் நூலை வெளியிட்டார்-.
கலை, கல்வெட்டு ஆய்வுகள் :
ஓவியங்கள் குறித்து ஆய்வு செய்தார். பல்லவர், சோழர்கால ஓவியங்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள் குறித்தும் ஆய்வு செய்துள்ளார். கட்டடம், சிற்பம், ஓவியம் குறித்த ஆய்வுகளைச் செய்ததால், ‘தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்’ என்னும் கவின்கலை நூல்களை எழுதினார். இதுவே, தமிழில் முதன்முதலாக வெளிவந்த கவின் நூலாகும். இந்நூல், தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்றது. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம், நுண்கலைகள், இசைவாணர் கதைகள் ஆகியன எழுதியதோடு, நுண்கலைகளுக்கு உரிய படங்களையும் தாமே வரைந்து வெளியிட்டார். இது இவரது கலைத்திறனுக்குச் சான்றாகும். தொல்காப்பியம், சங்க இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்து, நூல்களை எழுதினார். ‘தமிழ்நாட்டு வரலாறு’ என்னும் நூல், தமிழக வரலாற்றினைப் பல கோணங்களில் மீட்டு உருவாக்கம் செய்தது எனக் கூறலாம்.
பன்மொழிப் புலமை :
மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பாலி, ஆங்கிலம் எனப்பல மொழிகளில் பயிற்சியுடையவர். தமிழகத்தின் வரலாற்றை அடையாளப்படுத்தியவர். இவருடைய ஆய்வுகள் தமிழுலகுக்கு முதன்மையான
ஆய்வாகும். மதுரைப் பல்கலைக்கழகம், ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்றும், அறிஞர் பெருமக்கள், ‘ஆராய்ச்சிப் பேரறிஞர்’ என்றும் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தனர்-. தமது ஆய்வால் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் உரிய சுய அடையாளங்களை மீட்டுத் தந்தவர் ஆவார்
2. பாரதியின் கடிதம் வாயிலாக நீங்கள் அறிந்துகொண்ட மொழிப்பற்று, சமூகப்பற்று ஆகியவற்றை விவரிக்க.
மொழிப்பற்று :
“தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதையே கடமையாகக் கொள்!
புதியபுதிய சிந்தனைகள், புதியபுதிய உண்மைகள், புதியபுதிய இன்பங்கள் தமிழில் வளர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.
தமிழ், செழுமை அடைய வேண்டும்” என்னும் தம் விருப்பத்தை வேண்டுகோளாக வைக்கிறார். இங்கே பாரதியின் மொழிப்பற்று, விருப்பமாக வெளிப்படுகிறது.
சமூகப் பற்று :
பெண்ணுக்குச் சமவுரிமை வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
“தம்பி, ஆணும் பெண்ணும் ஓருயிர்; இரண்டு தலைகள்.
அவை ஒன்றுக்கொன்று தாழ்வில்லை!
பெண்ணை அடிமை செய்வோன், தன் கண்ணைக் குத்திக்கொண்டவனாவான்.
பெண்ணை அடைத்து வைப்பவன், கண்ணை அடைத்தவனாவான் என்று எழுது” என வேண்டுகோள் விடுக்கிறார் பாரதி.
எழுதுக! பேசுக! :
“தமிழ்நாடு வாழ்க! தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க!
தமிழ்நாட்டில் வீதிதோறும் தமிழ்ப் பள்ளிகள் பெருகுக!
அந்தப் பள்ளிகளில் நவீன கலைகள் எல்லாம் பயிற்சி பெற்று வளர்க” என்று, நெல்லையப்பரை எழுதச் சொல்கிறார்.
“வணிகமும் இயந்திரங்களும் பெருகவேண்டும் எனப் பேசு! முயற்சிகள் ஓங்க வேண்டும்.
இசை, சிற்பம், இயந்திர நூல், வானநூல், இயற்கைநூலென ஆயிரம் ஆயிரமாய்ப் பெருகவேண்டும் என முழங்கு தம்பி” என்று, கட்டளை இடுவதன்மூலம் பாரதியின் சமூகப்பற்று, தெளிவாய் வெளிப்படுகிறது.
3. தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
முன்னுரை:
தமிழ்மொழி நம் அடையாளம்; பண்பாட்டின் நீட்சி; உலகம் தோன்றிய காலந்தொட்டு, மக்களால் பேசப்பட்டு, எழுதப்பட்டு உயிர்ப்போடும் இளமையோடும் இருப்பது. இன்றும் தமிழ்மொழியின் புகழ் எத்திசையும் இலங்குகிறது. இத்தகைய தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைக் காணலாம்.
மாலைநேரக் கதிரவன்:
சிவந்த நிறமுடைய கதிரவன் தலைசாய்ப்பதுபோல் மலையின் பின்னே மாலைநேரத்தில் மறைவான். அப்போது வானம் சிவந்த பூக்காடுபோலக் காட்சியளிக்கும். அந்தச் சிவந்த நிறத்தைப்போலத் தம் கைகள் சிவக்க உழைக்கும் தொழிலாளர்களின் வியர்வைத் துளிகள் அவர்களின் பருத்த தோள்கள்மீது முத்துமுத்தாய் இருக்கும். இவற்றையெல்லாம் வியந்து பாட, எனதருமைச் செந்தமிழே உன்னையன்றி ஏற்ற துணை வேறுண்டோ!
குளிர்பொதிகைத் தென்தமிழே!:
தமிழ்க்குயிலே! பொங்கிவரும் கவிதைவெறிக்கு உணவாய் இருக்கின்றாய். சங்கம் வைத்துத் தமிழ் அறம் வளர்த்த பாண்டியர்களின் அவையில் வீற்றிருக்கின்றாய். பாரி முதலான பல வள்ளல்களைப் பெற்றுத் தந்திருக்கின்றாய்.
தமிழ்க்குயிலே ! அன்று நீ செய்த அந்தப் பழமையான நலத்தை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுவர, என்றன் மெய்சிலிர்க்கக் கூவி வா! குளிர்ந்த பொதிகை மலையில் தோன்றிய தென்தமிழே, சீறி வருவாயாக! புதுப்பொலிவுடன் விளங்கும் தமிழே தவழ்ந்து வருவாயாக! எனக் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
முடிவுரை:
காலத்திற்கேற்பத் தன்னைப் புதுபித்துக்கொண்டு இன்றளவும் சிறப்புற்றுத் திகழ்கின்ற தமிழின் சிறப்பைக் கவிஞர் சிற்பி வியந்து பாடுகின்றார்.
4. 'சொல்லோவியங்கள்' என்னும் கவிதை நூல் உங்கள் பள்ளி ஆசிரியரால் எழுதப்பட்டு உங்கள் பள்ளியில் வெளியிடப்படுகிறது. அவ்வெளியீட்டு விழாவிற்கான நிகழ்ச்சிநிரலை உருவாக்கி, நன்றியுரை எழுதுக.
சொல்லோவியங்கள்' - கவிதை நூல் வெளியீட்டு விழா
இடம் : அரசு மேனிலைப்பள்ளி அரும்பாவூர்
நாள் : 07.07.2023 புதன்கிழமை
நேரம் : பிற்பகல் 3 மணி
நிகழ்ச்சிநிரல்
தமிழ்த்தாய் வாழ்த்து: செல்வி தனலட்சுமி
வரவேற்புரை: திரு. ச. நடராசன் (தலைமையாசிரியர், அரசு மேனிலைப்பள்ளி, அரும்பாவூர்)
நூல் அறிமுக உரை: திரு. க. சுப்பையா அவர்கள் (ஓய்வுபெற்ற தமிழாசிரியர்)
நூல் வெளியீடு மற்றும் வாழ்த்துரை : திரு. இரா. இளங்குமரனார் அவர்கள் திருவள்ளுவர் தவச்சாலை, அல்லூர்
முதல் பிரதியைப் பெறுபவர்: திரு. அ. அமலதாஸ் அவர்கள் (பேரூராட்சித் தலைவர், அரும்பாவூர்)
நூலாசிரியர் உரை: திரு. அ. குமார் ஐயா அவர்கள் (எழுத்தாளர், தமிழாசிரியர், பணிநிறைவு)
தலைமை உரை : திரு. இல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் (தலைமையாசிரியர், ஒய்வு)
விழிப்புணர்வுப் பாடல்கள்: மாணவியர்
நன்றியுரை: திருமதி. த. வாசுகி (கணித ஆசிரியை)
நாட்டுப்பண்: மாணவ மாணவிகள்
நன்றியுரை
அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்!
இன்று நம் பள்ளியில் நடைபெறும் இவ்விழா, மிக முக்கியமான விழாவாகும். ஒரு பேனா தலைகுனியும் போது, ஒரு சமூகம் தலை நிமிரும் என்பார்கள். இன்று சொல்லோவியங்கள்' கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்குத் தலைமையேற்று, இனிய தலைமையுரை தந்து எழுத்துகளின் வலிமையை இச்சமூகம் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்திய தேசிய விருது பெற்ற எழுத்தாளர், பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் திரு. இல. கிருஷ்ணமூர்த்தி ஐயாவிற்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் மனமகிழ்வுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கிய திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவனர் இளங்குமரனார் அவர்கள், மாணவர்கள் நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அந்தப் பெருந்தகைக்கும் நன்றி.
இந்நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட பேரூராட்சித் தலைவர் திரு. அ. அமலதாஸ் அவர்கள் நல்ல மனம் கொண்ட கொடையாளர். அவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவிப்போம்.
சொல்லோவியங்கள் கவிதை நூலில் உள்ள கருத்துகளை எளிமையாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் திரு. க. சுப்பையா அவர்கள் மிக அற்புதமாக நூலை அறிமுகம் செய்தார். அவருக்கும் நம் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம். மிக அற்புதமாக நூலை உருவாக்கி நம் கரங்களில் இன்று தவழவிட்ட எழுத்தாளரும், நம் பள்ளியின் மூத்த தமிழ் ஆசிரியருமான திரு. அ. குமார் ஐயா அவர்களுக்கும் நம் நன்றியினைக் கரவொலியோடு தெரிவிப்போம்.
மிக அருமையாக இந்த விழாவினை நெறிப்படுத்திய நம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. ச. நடராசன் அவர்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவிக்கிறேன். வரவேற்புரை வழங்கிய திரு. ம. செல்லபாண்டியன், நடனமாடிய மாணவ மாணவிகள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த இருபால் ஆசிரிய தீபங்கள் மாணவ மாணவிகள் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன். நன்றி! வணக்கம்!
சான்றோர் சித்திரம்
மொழியை ஆள்வோம்
பர்மாவில் ரங்கூன் நகரில் உள்ள ஒரு கடையில் அடிப்பையனாகப் (உதவியாள்) பணியாற்றினான் ஒரு சிறுவன். அவனிடம், கடை முதலாளி ஒரு பெயரைக் குறிப்பிட்டு, அந்த நபர் வந்து தன்னை எங்கே என்று கேட்டால், 'முதலாளி இல்லை' என்று சொல்லுமாறு
வற்புறுத்தினார். அந்தச் சிறுவனோ, "நீங்கள் வெளியிலிருந்தால் அவ்வாறு கூறலாம். அப்படி இல்லாதபோது எப்படிப் பொய் சொல்வது? நான் சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாகக் கூறினார். அவர்தாம் வ.சுப.மாணிக்கம்.
'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற கொள்கையில் 'தமிழ்வழிக் கல்வி இயக்கம்.என்னும் அமைப்பை நிறுவியவர்; தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்; மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் செயலாற்றியபோது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழ்மொழியில் அமைவதற்கு ஆணை பிறப்பித்தவர்; அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தவர் வ.சுப.மாணிக்கம்.
சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் சிறந்தவர். தமிழ்க்காதல்,வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களையும் இயற்றியவர். கட்டுரை, நாடகம், கவிதை,உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையாக விளங்கியவர். அவருடைய மறைவிற்குப் பிறகு, தமிழ்நாடு அரசு 'திருவள்ளுவர் விருது' வழங்கியது; 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்பித்தது.
அவருடைய தமிழ்த்திறத்துக்கு ஒரு பதம்.
"ஐந்து கோடித் தமிழர் தொகை இருந்தும், ஆயிரம் படிகள் விற்பதற்கு மாமாங்கம் ஆகின்றது. வாங்காற்றல் மக்களிடம் இல்லை என்று சொல்லுதற்கில்லை. எத்துணையோ புதுக்கோலங்கட்கும் கேளிக்கைகட்கும் தலைகால் தெரியாமல் செலவு செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள்.நூல்கள் வாங்கும் அறிவுப் பழக்கத்தை மக்களிடம் பரப்ப வேண்டும்"
இரு பக்க அளவில் கட்டுரை எழுதுக.
தாய்மொழிவழிக் கல்வியின் சிறப்புகள். எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணைநிற்கும் – இதனை வலியுறுத்திப் பின்வரும் குறிப்புகளைக்கொண்டு கட்டுரை எழுதுக.
தாய்மொழிக் கல்வியின் தேவை - தாய்மொழிச் சிந்தனை - அறிஞர்களின் பார்வை - கற்கும் திறன்-பயன் - இன்றைய நிலை
முன்னுரை:
நம் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வெளியிடுவதற்கும், சிந்தனையாற்றல் பெருகுவதற்கும் தாய்மொழியே துணை நிற்கும். எனவே, தாய்மொழிவழிக் கல்வி கற்பதே அறிவு வளத்தைப் பெருக்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் துணைபுரியும் என்பதை இங்குக் காண்போம்.
தாய்மொழிக் கல்வியின் தேவை:
மனிதனின் சிந்தனையும், கற்பனையும் தாய்மொழியில்தான் உருவாகின்றன. தாய்மொழிக் கல்வியே ஒவ்வொருவருக்கும் அவசியமானது. தாய்மொழி வழிக்கல்வி எளிமையானது; இனிமையானது. மனிதனின் சிந்தனை வளர்ச்சிக்குத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது.
தாய்மொழிச் சிந்தனை:
எத்தனை மொழிகள் கற்றாலும் ஒருவனின் சிந்தனை ஊற்றெடுப்பது தாய்மொழியில்தான். மனிதர்களின் மனவெழுச்சி, வாழ்விற்கு அடிப்படை. அத்தகைய மனவளர்ச்சியைத் தாய்மொழியால் மட்டுமே பெற முடியும்.
அறிஞர்களின் பார்வை:
"தாய்மொழியில் அறிவியல் கல்வியைக் கொடுப்பதன்மூலம் ஆக்கப்பூர்வ சிந்தனையைக் குழந்தைகள் மத்தியில் கொண்டுவர முடியுமென்று" கூறினார் அப்துல்கலாம். “ஒருவனது இதயத்தைத் தொடுவதற்கு அவனது தாய்மொழியில் பேசவேண்டும் என்றும், பொதுமொழியில் பேசினால் அவனது எண்ணத்தை மட்டுமே அறியமுடியும்” என்றும் கூறினார் நெல்சன் மண்டேலா. "பள்ளிகளில் பயிற்று மொழியாகத் தாய்மொழிதான் இருக்க வேண்டும்" என்றார் மகாத்மா காந்தியடிகள்.
கற்கும் திறன்:
தாய்மொழி வாயிலாகக் கற்கும் திறன் மாணவர்களுக்கு இயல்பாகவே இருக்கும். தாய்மொழி மூலமாகவே தான் கூற விரும்பும் கருத்தைத் தெளிவாகவும் முழுமையாகவும் ஆழமாகவும் ஒருவரால் தெரிவிக்க முடியும். கற்கும் திறன் அதிகரிப்பது தாய்மொழி வழியாகத்தான். தாய்மொழி வழியாகக் கற்கும்போது சிந்தனைத் திறன் அதிகமாகும்.
தாய்மொழி வழிக் கல்வியின் பயன்:
கருவிலேயே தாய் பேசும் மொழியோடு குழந்தைக்கு அறிமுகம் ஏற்படுவதால், தாய்மொழி வழிக் கற்றல் என்பது குழந்தைக்கு எளிதாகிறது. தாய்மொழியில் கற்கும் குழந்தைகள் சிறந்த அறிஞர்களாக, மேதைகளாக வளருவார்கள். தரமான கல்வியும் பெறுவார்கள்.
இன்றைய நிலை:
தாய்மொழி வழிக் கல்வி கற்போரை இன்று கேவலமாக நினைக்கின்றனர். தாய்மொழிக் கல்வி பயில்வோரைத் தரக்குறைவாக எண்ணுவது, இன்றைய சமுதாயத்தின் அவலங்களில் ஒன்றாக உள்ளது. இது தவறான எண்ணம்.
முடிவுரை:
மொழி என்பது ஒரு தகவல் தொடர்புச் சாதனம் மட்டுமன்று; ஒரு பண்பாட்டின் - ஓர் இனத்தின் அடையாளம் என்பதை உணர்ந்தாலே தாய்மொழியையும் தாய்மொழிவழிக் கற்றலையும் அழிவிலிருந்து காக்கலாம்.
தமிழாக்கம் தருக.
1. Learning is a treasure that will follow its owner everywhere.
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு.
2. A new language is new life.
புதிய மொழியை அறிவது, புதிய வாழ்க்கையாக அமையும்.
3. If you want people to understand you, speak their language.
மக்கள் உன்னைப் புரிந்துகொள்ள விரும்பினால், அவர்கள் மொழியில் பேச வேண்டும்.
4. Knowledge of languages is the doorway to wisdom.
பன்மொழி அறிவு என்பது, மதிநுட்பத்திற்கு வாயிலாகும்.
5. The limits of my language are the limits of my world.
என் மொழியின் எல்லை என்பது, என் உலகின் எல்லையாகும்..
இலக்கிய நயம் பாராட்டுக.
முச்சங்கங் கூட்டி
முதுபுலவர் தமைக் கூட்டி
அச்சங்கத் துள்ளே
அளப்பரிய பொருள்கூட்டி
சுவைமிகுந்த கவிகூட்டி
சொற்சங்க மாகச்
அற்புதங்க ளெல்லாம்
அமைத்த பெருமாட்டி!
-கண்ணதாசன்.
ஆசிரியர் குறிப்பு:
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் புகழ் பெற்ற 'கவியரசு' கண்ணதாசன், நாலாயிரம் கவிதைகள், ஐயாயிரம் திரைப்படப் பாடல்கள், கதைகள், கட்டுரைகள் எழுதியவர். "முச்சங்கம் கூட்டி..." எனத் தொடங்கும், அவர் எழுதிய பாடலின் நயத்தை இங்கு ஆராய்வோம்.
மையக்கருத்து:
கருத்துச் செரிந்த இலக்கியங்களை நாளும் படைத்துப் புதுப்பொலிவுடன் தமிழ்ப் பெருமகள், அன்னையாகத் திகழ்கிறாள்.
எதுகை:
அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து அளவு (மாத்திரை) ஒத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
அடிஎதுகை: முச்சங்க, அச்சங்கம், சொற்சங்க, அற்புதங்க
மோனை:
அடிகளிலோ, சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனை.
சீர்மோனை: முச்சங்க, முதுபுலவர், அற்புதங்கள், அமைத்த, அச்சங்க, அளப்பரிய
இயைபு:
அடிதோறும் இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு.
அடி இயைபு: தமைக்கூட்டி, பொருள்கூட்டி, கவிகூட்டி
அணி:
செய்யுளுக்குச் சொல்லாலோ, பொருளாலோ மேலும் அழகு சேர்ப்பது அணி. இப்பாடலில் 'கூட்டி' என்னும் சொல், ஒரே பொருளில் பலமுறை பயின்று வந்துள்ளதால், சொற்பொருள் பின்வருநிலையணி இடம் பெற்றுள்ளது எனலாம்.
சுவை:
பாடலின் உட்கருத்தை நம் மனக் கண்முன்னே காட்சிப்படுத்துவது சுவையாகும். தமிழன்னையின் பெருமையைப் புகழ்ந்து பாடுவதால், இப்பாடலில் 'பெருமிதச் சுவை' பயின்று வந்துள்ளது.
கண்ணதாசனின் "முச்சங்கம் கூட்டி..." எனத் தொடங்கும் பாடல் எதுகை, மோனை, இயைபு, அணி எனப் பல சுவை நயங்களைத் தன்னகத்தே கொண்டு, படிப்போரைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது எனலாம்.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஐந்து வினாக்களை உருவாக்குக.
மொழி என்பது மக்கள் படைத்துக் காக்கும் அரியதொரு கலை. மொழியே மக்களின் அறிவை
வளர்த்து உயர்த்தும் அரிய கருவியாகவும் உள்ளது.பெற்ற தாயின் முதல் வேட்கைதன் குழந்தையுடன் பேசுதல். அவள் முதலில் அடையும் பெரிய மகிழ்ச்சி, குழந்தையின் பேச்சைக் கேட்பதே ஆகும். குழந்தையின் மனவளர்ச்சியோடு தொடர்புடையது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கு ஏற்பவே பேசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியராகவும் உள்ளனர்; மாணவராகவும் உள்ளனர். மொழியை வளர்ப்பவரும் மக்களே; மொழியால் வளர்பவரும் மக்களே. மொழி வரலாறு (மு. வரதராசனார்)
வினாக்கள்:
1. மொழி என்பது யாது? அது எத்தகையது?
2. பெற்ற தாயின் முதல் வேட்கை எது? பெரிய மகிழ்ச்சி எது ?
3. மொழி வளர்ச்சி என்பது, எதனோடு தொடர்புடையது?
4. மொழி எவ்வாறு வளர்ச்சி பெறும்?
5. மொழியை வளர்ப்பவர் யார்? எவ்வெவ்வாறு?
உவமைத் தொடர்களைச் சொற்றொடர்களில் அமைத்து எழுதுக.
1. தாமரை இலை நீர்போல:
துறவிகள், தாமரை இலை நீர்போல, உலகப் பற்று இல்லாமல் வாழ்வார்கள்.
2. கிணற்றுத் தவளைபோல:
இன்றும் சில பெண்கள் உரிய கல்வியைப் பெறாததால் கிணற்றுத்தவளைபோல, வெளியுலகம் அறியாது வாழ்கின்றனர்.
3. எலியும் பூனையும்போல:
அமெரிக்காவும் சீனாவும் எலியும் பூனையும்போல கொள்கைகளால் முரண்பட்ட நாடுகளாக இருக்கின்றன.
4. அச்சாணி இல்லாத தேர்போல:
குறிக்கோளை முடிவு செய்யாததால் சிலர், அச்சாணி இல்லாத தேர்போல வாழ்வில் தள்ளாடுகின்றனர்.
5. உள்ளங்கை நெல்லிக்கனிபோல:
நம்பகத்தன்மை இல்லாத நாடு இலங்கை என்பது, நமக்கு இப்போது உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளங்கி இருக்கிறது.
எண்ணங்களை எழுத்தாக்குக.
மொழியோடு விளையாடு
குறிப்புகளில் மறைந்திருக்கும்தமிழறிஞர்களைக் கண்டுபிடிப்போம்.
எ.கா. கவிஞர்; ஈற்றிரு சொல்லால் அணிகலன் செய்யலாம் -( விடை: கவிமணி. )
1. தமிழறிஞர்; முதலிரு எழுத்துகளால் மறைக்கலாம். ( விடை: மறைமலை அடிகள் )
2. தாய்மொழி; ஈற்றிரு எழுத்துகள் வெளிச்சம் தரும். ( விடை: தமிழ் ஒளி )
3. சிறுகதை ஆசிரியர்; முதல் பாதி நவீனம். ( விடை: புதுமைப்பித்தன் )
4. முன்னெழுத்து அரசன்; பின்னெழுத்து தமிழ் மாதம். ( விடை: கோதை )
(தமிழ் ஒளி, அம்பை, கோதை, அசோகமித்திரன், புதுமைப்பித்தன், சூடாமணி, ஜெயகாந்தன்,
மறைமலை அடிகள்)
கதையைத் தொடர்ந்து நிறைவு செய்க.
வேப்பமரத்தாலான மரப்பாச்சிப் பொம்மை ஒன்று என் வீட்டில் நெடுங்காலமாக இருந்தது. மிகுந்த அன்போடு அதற்கு என் பெயரை வைத்திருந்தேன். எத்தனையோ வாசனைகளை அதன்மீது பூசினேன். ஆனாலும், அந்தக் கசப்பின் வாசம் போகவில்லை. இரவில் அதன் மெல்லிய விம்மல் ஒசை கேட்கும்....
ஏன் அழுகிறது பொம்மை என நான் அதைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுத்து, அதன் சின்ன கன்னங்களில் முத்தமிட்டு... 'அழாதே' எனச் சொல்லிவிட்டுப் படுத்தேன். தூங்கியபின் கனவில் வந்த மரப்பாச்சிப் பொம்மையிடம் கேட்டேன், “ஏன் அழுகிறாய்?" என்று.
“நீ உன் அப்பா அம்மாவுடன் வாழ்கிறாய். அவர்கள் உன்னைக் கொஞ்சுகிறார்கள், அன்பைப் பொழிகிறார்கள். எனக்கோ அப்பா அம்மா யார் என்றே தெரியாது. எனவே, என் அப்பா அம்மாவை நினைத்து அழுகிறேன்" என்றது பொம்மை. “இரு, நான் உன்னை உன் அப்பா அம்மாவிடம் அழைத்துச் செல்கின்றேன்" என்று எழுந்தேன்; விழித்துக் கொண்டேன். இன்னும் விம்மல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
அழுவது யார் என எண்ணிப் பொம்மையிடம் சென்றேன். பொம்மையிடமிருந்து சத்தம் இல்லை. அருகிலிருந்த ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தேன். என் வயது ஒத்த ஒரு சிறுவன் குளிரில் நடுங்கியபடி அழுது கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. 'தம்பி... ஏன் அழுகிறாய் என்றேன்'. 'பசிக்குது' என்றான். ஓடிச் சென்று சமையலறையில் என்ன இருக்கிறது எனப் பார்த்தேன். வீட்டில் அனைவரும் உண்டதுபோக இரண்டு இட்லி மீதம் வைத்திருந்தாள் அம்மா. அதில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி, அவனிடம் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் படுத்தேன். விம்மல் ஒலி இல்லை.
படிப்போம்; பயன்படுத்துவோம்!
Anthropology - மானுடவியல்
Archaelogy - தொல்லியல்
Research - ஆராய்ச்சி
Fine Arts - கவின்கலைகள்
Field Study - கள ஆய்வு
Epigraphy - கல்வெட்டியல்
0 Comments:
Post a Comment